சற்று முன் வெளியான தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளன. கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவிற்கு சாதகமாக இருந்த நிலையில், கள நிலவரம் முற்றிலும் மாறுபட்டதொரு முடிவை எட்டியுள்ளது. குறிப்பாக, மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார் என எதிர்பார்த்து காத்திருந்த திமுகவிற்கு, கொளத்தூர் தொகுதி முடிவு ஒரு பேரதிர்ச்சியாகவே அமைந்தது.
கடைசி நேரத்தில் இரண்டாவது இடமாவது கிடைக்குமா என போராடும் நிலைக்கு தள்ளப்பட்ட திமுகவிற்கு, அசைக்க முடியாத கோட்டை என்று ஸ்டாலினால் வர்ணிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியிலேயே அவர் தோற்றது பெருத்த அடியாகும். முதல்வர் தோற்றுவிட்டார் என்ற செய்தி திமுகவினருக்கு மட்டுமின்றி, அரசியல் ஆர்வலர்கள் பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொளத்தூர் தொகுதி திமுகவின் கோட்டை என முழங்கி வந்த ஸ்டாலினையே, அவரது கோட்டையிலேயே ஓட்டெடுத்து வீழ்த்திவிட்டது ‘விஜய் பேரலை’ என்றால் அது மிகையல்ல.
ஸ்டாலினை அவரது தொகுதியிலேயே வீழ்த்திய அந்த வீரவேட்பாளர் யார்? இதுதான் இப்போது தமிழக மக்கள் அனைவரும் பரபரப்பாகத் தேடும் விஷயம். அவர்தான் வி.எஸ்.பாபு. அவர் வேறு யாருமல்ல, அடிப்படையில் திமுகவில் இருந்தவர் என்பதே இந்த சஸ்பென்ஸின் உச்சம். ஆம், ஒரு காலத்தில் திமுகவில் கோலோச்சிய முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர்! திமுகவின் கருவிகளை எடுத்து, திமுக தலைவரையே காலி செய்துவிட்டார் விஜய் என்பதுதான் நிதர்சனம். அப்படி யார் இந்த வி.எஸ்.பாபு என்பதைப் பார்ப்போம்.
ஒரு காலத்தில் திமுகவில் இருந்த வி.எஸ்.பாபு சாதாரண தொண்டனாக அல்ல, வடசென்னை மாவட்டச் செயலாளர் என்ற பலம் பொருந்திய பதவியில் இருந்தவர். 2006ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர். அடுத்த தேர்தலுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது, 2011ல் கொளத்தூர் என்ற புதிய தொகுதி உருவாக்கப்பட்டது. அங்குதான் முதன்முதலாக ஸ்டாலின் களமிறங்கினார். ஸ்டாலினின் வெற்றிக்காக வி.எஸ்.பாபு தீவிரமாக தேர்தல் வேலைகளைச் செய்தார். அந்தத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
ஆனால், அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை விட வெறும் 2000 ஓட்டுகள் மட்டுமே கூடுதலாக வாங்கியிருந்தார் ஸ்டாலின். இது வி.எஸ்.பாபு மீது திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனாலேயே அவரை திமுக கழற்றிவிட்டது. அதே நேரத்தில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவிய சேகர் பாபுவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அதன்படி வடசென்னை பகுதியும் சேகர் பாபு கைக்குச் சென்றது. திமுகவில் ஓரங்கட்டப்பட்டதால் அதிர்ச்சியடைந்த வி.எஸ்.பாபு, அதிமுகவில் சேர்ந்தார். ஆனால் அங்கும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, அதிருப்தியிலேயே இருந்து வந்தார்.
மீண்டும் சென்னையில் தனது பலத்தைக் காட்ட விரும்பிய வி.எஸ்.பாபு, சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தொடங்கிய கட்சியில் சேர்ந்தார். கொளத்தூரில் யாருக்காக முன்பு வி.எஸ்.பாபு வேலை பார்த்து அவமானப்பட்டாரோ, அவரையே எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பை வி.எஸ்.பாபுவுக்கு விஜய் வழங்கினார். அதன்படி ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் களமிறங்கினார் வி.எஸ்.பாபு. ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார், திமுகவின் முதல் வேட்பாளரும் அவர்தான்; அவரை எப்படி தோற்கடிக்க முடியும்? ஸ்டாலின்தான் வெல்வார் என கணிப்புகள், அரசியல் நிபுணர்கள் ஏன் எதிர்க்கட்சியினர் கூட அப்படித்தான் பேசி வந்தனர்.
ஆனால், வி.எஸ்.பாபு மனம் தளரவில்லை. விஜய்யின் மக்கள் நல இயக்கத்தின் அலையை தனக்கு சாதகமாக, திட்டவட்டமாகப் பயன்படுத்தினார். மனம் தளராமல் களத்தில் வேலை செய்தார். செய்யவே முடியாது என்று சொல்லப்பட்ட விஷயத்தை இப்போது செய்து காட்டிவிட்டார். முதல்வரையே மண்ணைக் கவ்வ வைத்துவிட்டார். அவர் போட்ட உழைப்பும், விஜய் ஆதரவு அலையும்தான் வி.எஸ்.பாபுவை இப்போது வெல்ல வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஒரு காலத்தில் கொளத்தூரில் யாருக்காக வேலை பார்த்தாரோ, யாரால் திமுகவை விட்டு வெளியேறும் நிலை வந்ததோ, அவரையே எதிர்த்து வி.எஸ்.பாபு ரிவெஞ்ச் எடுத்து வென்றிருக்கிறார்.
ஒரு காலத்தில் தீவிர உடன்பிறப்பாக இருந்தவரை வைத்தே, உடன்பிறப்புகளின் தலைவரை வீழ்த்தி அரசியல் சாணக்கியனாகிவிட்டார் விஜய்.
0 கருத்துகள்